கணவன் மனைவியின் கடி விளையாட்டு!

நிலா மணியை பார்த்து சரி கால் செய்யலாம்னு கைபேசியை எடுத்து நிஷாந்துக்கு கால் செய்தா. இது ஒண்ணும் இது புதிய செயல் இல்லை தினமும் நிலா செய்யறது தான் இருந்தாலும் அவளுக்கு தினமும் அந்த நாலு மணி ஆச்சுன்னா கால் செய்ய படபடப்பு வந்துடும். சொல்லு குட்டி என்று நிஷாந்தின் குரல் கேட்டதும் நிலா படபடப்பு அடங்கி நிஷு என்னடா இன்னைக்கு எப்போ வருவே என்று கேட்டா. அவன் வழக்கம் போல அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் சாப்பிட்டியா தூங்கினியா என்று பேச்சை மாற்றினான். நிலா விடாமல் நிஷு நான் கேட்டதுக்கு சொல்லு எப்போ வருவே என்று அவள் கேள்வியில் நின்றாள். நிஷாந்த் வேறு வழி இல்லாமல் இல்லடா குட்டி இன்னைக்கும் லேட்டாகும்னு நினைக்கிறேன் நீ சாப்பிட்டுட்டு எனக்கு எடுத்து வச்சுட்டு என்றான். நிலா ஆமா இதுக்கு தான் தினமும் கால் பண்ணி கேட்கிறேனா போடா நீ வரவே வேண்டாம்னு போனை வைத்தா. முகம் கழுவி தலை வாரி கொண்டு பூக்கார அம்மா குடுத்து விட்டு சென்ற மல்லியை கொஞ்சம் தலையில் வைத்து மீதியை சாமி படத்துக்கு போட்டு விளக்கு ஏற்றினா. அவளுக்கும் ஆசை தான் ஒரு நாளாவது நிஷு சீக்கிரம் வந்து அவளுக்கு பூ வச்சு விட்டு இருவரும் சேர்ந்து விளக்கு ஏற்றணும்னு ஆனா அது இந்த மூணு மாச திருமண வாழ்க்கையில் ஒரு நாள் கூட நிறைவேறவில்லை.